Sunday, March 8, 2015

யூரிக் ஆசிட்





எல்லா உயிருள்ள உடல்களைப் போல, நாம் உண்ணும் உணவு என்பதும் (சைவ மற்றும் அசைவ உணவுகள்) செல்களால் ஆனதே. பாலூட்டி இன விலங்குகளில் இந்த உணவு ஜீரணமடைதல் நிகழ்வின் போது இந்த உணவில் உள்ள புரோட்டீன், கொழுப்பு போல, இதில் உள்ள மரபணு பொருட்களும் (DNA & RNA) ஜீரணமடைதல் நிகழ்விற்கு உட்படுத்தப்படுகிறது. 

அதோடு, உடலின் செல்கள் பல்வேறு காரணங்களால் மரணமடையும் போது அதில் உள்ள மரபணுக்களும் இதே நிகழ்வின் மூலம் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு புதிய செல்கள் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு, மரபணுக்களான DNA மற்றும் RNA ஜீரணமாதல் நிகழ்விற்கு உட்படுத்தும் போது அதன் மூலப்பொருட்களாக மாற்றப்படுகிறது. இந்த மூலப்பொருட்களே புதிய செல்கள் உருவாக்கத்தின் போது DNA மற்றும் RNA உருவாக்க பயன்படுகிறது. அந்த மூலப்பொருட்கள் மொத்தம் இரண்டு வகைப்படும். 

அவைகள் :-

பியூரின் (PURINES) மற்றும் பிரிமிடின் (PYRIMIDINES).

யூரிக் ஆசிட் என்பது பாலூட்டி வகை உயிரினங்களில், மேற்சொன்ன மூலப்பொருட்களில் ஒன்றான பியூரின்கள் (PURINES) பல்வேறு காரணங்களுக்காக வேதியியல் முறையில் (METABOLISM) உடைபடும் போது உண்டாகும் நச்சு தன்மை வாய்ந்த இறுதி நிலை கழிவுப்பொருள் (FINAL METABOLITE) ஆகும்.

இவ்வாறு செல்களில் உண்டாக்கப்படும் யூரிக் ஆசிட், இரத்தம் வழியாக எடுத்து செல்லப்பட்டு, சிறுநீர் உருவாதலின் போது அதில் கரைத்து, பின்னர் சிறுநீர் வழியாக உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது. இந்த யூரிக் ஆசிட் நச்சு தன்மை வாய்ந்தது என்பதால், தினசரி நமது உடலை விட்டு வெளியேற்றப்பட வேண்டியது கட்டாயம். இது நலமாக உள்ள ஒரு உடலில் தினசரி நடக்கும் இன்றியமையாத நிகழ்வாகும்.

ஒரு நலமாக உள்ள மனிதனுக்கு சராசரியாக 250 – 750 மில்லி கிராம் யூரிக் ஆசிட் சிறுநீரிலும், 3.5 – 7.2 மில்லி கிராம் இரத்தத்திலும் இருக்கலாம். இந்த அளவு கூடவோ குறையவோ செய்யும் போது நமது உடல் நலத்தில் குறைபாடு என தெரிந்து கொள்ளலாம்.

எப்போதெல்லாம் யூரிக் ஆசிட் பரிசோதனை பரிந்துரை செய்யப்படுகிறது ?

தற்போதுள்ள நிலையில் CHEMOTHERAPHY எனப்படும் கூட்டு மருந்து சிகிச்சை செய்துக் கொள்ளும் புற்று நோய் நோயாளிகளும், RADIATION THERAPHY எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளும் புற்று நோய் நோயாளிகளுக்கும், GOUT எனப்படும் நோய் ஏற்பட்ட நோயாளிகளும் இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவை பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

GOUT என்பது இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு கூடும் போது, உடலின் பல்வேறு மூட்டுகளிலும் குறிப்பாக கால் விரல் மூட்டுகளில் இந்த அதிகப்படியான யூரிக் ஆசிட் படிமங்கள் போல (கற்கள்) ஏற்பட்டு, விரல்களை நீட்டி மடக்க இயலாத நிலை உண்டாகும். அவ்வாறு நீட்டி மடக்கும் போதும், நடக்க முயற்சிக்கும் போது தாங்க இயலாத வலி ஏற்படும். புற்று நோயாளிகள் மேற்சொன்ன சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போது உடலில் அதிக அளவில் செல் இறப்பு ஏற்பட்டு, அதன் மூலம் இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு கூடும்.

அதோடு சில சந்தர்ப்பங்களில் உதாரணமாக, சிறுநீரக கோளாறுகள் மூலம் சிறுநீர் பிரித்தெடுக்கும் செயல் குறையும் போது இரத்தத்திலும், சிறுநீரிலும் யூரிக் ஆசிட் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சிறுநீரக கோளாறுகளின் போதும் இந்த பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.


யூரிக் ஆசிட் பரிசோதனை முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன ? 

இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு, சாதரண அளவை விட அதிகமாக இருக்குமானால் அதை HYPERURICEMIA என அழைப்பர். இதன் படி அதிக அளவு யூரிக் ஆசிட் உருவாகி இரத்தத்தில் கலக்கிறது அல்லது சிறுநீரகங்களால் இரத்தத்தில் கலக்கும் யூரிக் ஆசிட்டை வெளியேற்ற இயலவில்லை என மருத்துவர்கள் அறிந்து கொள்வர். ஆனால் இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க மேலும் பரிசோதிக்க வேண்டியிருக்கும்.

MULTIPLE MYLOMA, LEUKIMEIA போன்ற புற்று நோய்கள், சிறுநீரக செயல் இழப்பு, பெண்களில் கர்ப்ப காலம், அதீத குடிப்பழக்கம் முதலிய நிலையிலும் இந்த பரிசோதனை அதிக அளவு யூரிக் ஆசிட் கொண்டிருக்கும்.

இரத்தத்தில் குறைவான யூரிக் ஆசிட் அளவு என்பது பொதுவாக சில வகை கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களிலும், அதிக அளவு நச்சு பொருட்கள் இரத்தத்தில் கலக்கும் போதும் (புகை மற்றும் குடிப்பழக்கம்) மரபணு குறைபாடு தொடர்புடைய நோய்களிலுமே காணப்படும். உதாரணமாக வில்சன் நோய் குறைபாடு (WILSON DISEASE) – செம்பு (COPPER) எனப்படும் தாது பொருள் சம்பந்தப்பட்ட நோய்.

சிறுநீரில் அதிக அல்லது குறைவான அளவு யூரிக் ஆசிட் என்பது, இரத்தத்தில் காணப்படும் அளவை பொறுத்தே அமையும். இதை தவிர குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சிறுநீரக கோளாறு, குடிப்பழக்கம் போன்றவை சிறுநீரில் யூரிக் ஆசிட் அளவை வேறுப்படுத்தும் காரணிகள் ஆகும்.

பியூரின்கள் (PURINES) செல்களில் வேதிவினைகள் மூலம் உடைக்கப்படுவதற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது பாலூட்டிகளில் அனுதினமும் சாதாரணமாக நடக்கும் ஆனால் முக்கியமான வேதி நிகழ்வுகளில் ஒன்று ஆகும். சில குழந்தைகள் இயல்பிலேயே மரபணு குறைபாட்டின் காரணமாக இந்த வேதி நிகழ்வு தடைப்பட்ட நிலையில் பிறப்பதும் உண்டு. இந்த குழந்தைகளையும் இந்த பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க இயலும்.

இதை தவிர சில மருந்துகளின் அதீத உபயோகம் உதாரணமாக ஆஸ்பிரின், சில வகை வலி நிவாரணிகள் (Salycilate drugs), அதிக மது உட்கொள்ளுதல், புற்று நோய்க்கு மேற்கொள்ளப்படும் பல்கூட்டு மருந்துகளின் உபயோகம் – CHEMOTHERAPHY, அதீத அசைவ உணவுகள் (கல்லீரல் மற்றும் சிறுநீரகம்), பட்டினி அல்லது விரதம் காரணமாக உணவு உட்கொள்ளாமை, மன அழுத்தம், கடுமையான உடற்பயிற்சி போன்றவையும் இரத்த யூரிக் ஆசிட் அளவை மாறுபடுத்தும்.

1 comment:

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...